கரூரில் 12 மணி நேரத்துக்கும் மேலாக எரியும் குப்பைக் கிடங்கு
குப்பைக் கிடங்கில் 12 மணி நேரமாக எரிந்து வரும் தீயை அணைக்க 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் முயற்சி செய்து வருகின்றனர்.
HIGHLIGHTS
கரூர் நகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் வாங்கல் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை கிடங்கில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து மளமளவென பரவிய தீ குப்பை கிடங்கில் பெரும்பாலான பகுதியில் பற்றி எரிந்தது. தகவல் அறிந்து வந்த கரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையினர் தீயை அணைக்க முயற்சி எடுத்தனர்.
தொடர்ந்து தீ அதிக அளவில் எரிந்ததால் உடனடியாக கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 5 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் நேற்று இரவு 7 மணியில் இருந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். கரூர் நகராட்சிக்கு சொந்தமான லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு தீயை அணைக்க பெரும் முயற்சி எடுப்பதால் ஓரளவுக்கு தீ கட்டுக்குள் உள்ளது. இருந்தாலும், தொடர்ந்து புகை அதிக அளவில் வெளியேறுவதால் கரூர்-வாங்கல் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.