சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்
Human Chain -திருவண்ணாமலையில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
HIGHLIGHTS
Human Chain -திருவண்ணாமலை காந்தி சிலை அருகில், சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு மனித சங்கிலி போராட்டத்தை தொடங்கி வைத்து கோஷங்கள் எழுப்பினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
மதத்தின் அடிப்படையில், வெறுப்புணர்ச்சியை வளர்க்கும் பிரிவினைவாதிகளுக்கு இடமளிக்க மாட்டோம் என்ற வகையில் இந்த மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் நாட்டில் மதத்தின் பெயரால், மக்களிடையே பிரிவினை உணர்வுகளை வளர்க்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என்பது, இந்தியாவின் அடையாளம்.
ஆனால் இவர்கள் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே உணவு, ஒரே மொழி என்று மலிவான பிரிவினை அரசியலை செய்து கொண்டிருக்கின்றனர். உலகமே ஆங்கிலத்தை ஒருங்கிணைத்து முன்னேற்றப் பாதையில் செல்லும்போது, ஆங்கிலத்திற்கு எதிரான நிலைப்பாடு இந்தியா எடுத்தால் நம் மாணவர்களின் வாழ்க்கை சூன்யமாகி விடும். மதம், மொழி, கலாச்சாரத்தை வைத்து பிரிவினை வாதத்தை செய்கின்றனர். மக்களை பிரிக்க நினைத்து, வெறுப்பு அரசியலை செய்கின்றனர்.
நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானாவர்கள் அல்ல. இந்தி, சமஸ்கிருதம் படித்தவர்கள் தான் நாட்டில் முன்னேற முடியும் என்று புதிய கல்வி கொள்கை மூலம் கொண்டு வர முயற்சிக்கின்றனர். இந்தி திணிப்பில் இதே அணுகுமுறையை மத்திய அரசு தொடர்ந்தால், 1965-ல் நடந்த மொழிப்போரை விட வீரியமான மொழிப்போர் வெடிக்கும்.
தமிழக கவர்னர், அவரது கடமைகளில் செயல்படாமல் உள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டு வரும் தீர்மானங்களுக்கு முழு வடிவம் கொடுப்பது போன்று கவர்னரின் செயல்பாடு இருக்க வேண்டும். சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 16 மசோதாக்கள் இன்றைக்கு நிறைவேறாமல் இருப்பதற்கு முழு காரணம் அவர் தான்.
மாநில வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி, நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் புறம் தள்ளிவிட்டு மக்களை பிரிக்கும் வண்ணம் இவர்கள் அரசியல் செய்து கொண்டு வருகிறார்கள் இதற்கு தமிழகத்தில் இடம் இல்லை என்று விளக்குவதற்காக தான் ஜனநாயகத்தின் நம்பிக்கை உள்ள அனைத்து இயக்கங்களும் இன்று ஒன்று கூடி இந்த மனித சங்கிலி போராட்டத்தை நடத்துகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
ம.தி.மு.க. மாவட்ட செயலாளார் சீனி.கார்த்திகேயன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அம்பேத்வளவன், மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் சிவக்குமார், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் தங்கராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.
முன்னதாக 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப்படம், திருவண்ணாமலையில் உள்ள திரையரங்கில் நேற்று இரவு மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தலைமையில் வெளியிடப்பட்டது. மதிமுக மாவட்ட செயலாளர் சீனி கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, திமுக மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ. வ. வே. கம்பன் , முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன் , நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் , முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2