திருவண்ணாமலைக்கு சிறப்பு சரக்கு ரயில் மூலம் வந்த உர மூட்டைகள்
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள், சரக்கு ரயில் மூலம் வந்தடைந்தன.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நடப்பு பருவத்துக்கு தேவையான 3,988 மெட்ரிக் டன் உரங்கள், சரக்கு ரயில் மூலம் வந்தடைந்தன.
சென்னை, மணலியில் இருந்து 1,800 மெட்ரிக் டன் யூரியா, வேலூா் மாவட்டம், காட்பாடியில் இருந்து 650 மெட்ரிக் டன் கிரிப்கோ யூரியா மற்றும் 1,538 மெட்ரிக் டன் என்.எப்.எல். யூரியா என மொத்தம் 3,988 மெட்ரிக் டன் உர மூட்டைகள் திருவண்ணாமலைக்கு சிறப்பு சரக்கு ரயில் மூலம் வந்தன.
இவற்றில் 1,938 மெட்ரிக் டன் யூரியா தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், 2 ஆயிரத்து 50 மெட்ரிக் டன் யூரியா தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பும் பணி நடைபெற்றது.
இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்
நடப்பு பருவத்துக்கு தேவையான உரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வளஅட்டை பரிந்துரையின் படி பயிறுக்கு தேவையான உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் ரசீது பெற்று பயனடையலாம்.
விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை அளித்து தங்கள் விரல் ரேகையை பதிவு செய்து மண்பரிசோதனை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட அளவுபடி உரங்களை பெற்ற பயனடையலாம்.
சட்ட விதிகளுக்கு உட்பட்டு உர விற்பனையாளர்கள் விவசாயிகளக்கு மானிய விலையிலான உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் விற்பனை செய்ய வேண்டும்.
விவசாயிகள் விரும்பாத இதர இடுபொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால் உர உரிமங்கள் ரத்து செய்யப்படும்.
தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் விற்பனை முனைய கருவி வாயிலாக விவசாயிகளுக்கு உரம் வினியோகம் செய்ய வேண்டும். என தெரிவித்தனர்.