ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் -கனிமொழி
ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆவார் என்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என தூத்துக்குடியில் கனிமொழி எம்பி., கூறினார்.
தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கீதாஜீவன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தூத்துக்குடி சப்கலெக்டர் அலுவலகத்தில் சப்கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் கலோனிடம் தனது மனுவை அளித்தார். அப்போது திமுக தெற்கு மண்டல பொறுப்பாளர் கனிமொழி எம்பி, காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, திமுக ஆட்சி நிச்சயம் மலரும். தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்பார். கீதாஜீவன் தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு நல்ல பணிகளை செய்து வருகிறார் அவர் மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதிமுகவை பொறுத்தவரை 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. ஆனால் மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. திமுக அளித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் ஸ்டாலின் நிறைவேற்றுவார் மீண்டும் அவர் முதல்வர் ஆவார் என்றார்.
முன்னதாக திமுக வேட்பாளர் கீதாஜீவன், போல்பேட்டையில் திமுக தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்தார். பின்னர் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகிலுள்ள அருள்மிகு ஸ்ரீபோத்தி விநாயகர் ஆலயம் முன்பிருந்து கூட்டணி கட்சியினர், தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார்.