பெரம்பலூரில் தொடரும் திருட்டு சம்பவங்கள்: பொதுமக்கள் அச்சம்
பெரம்பலூரில் ஒரே நாளில் மூன்று வீடுகளில் அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்
HIGHLIGHTS
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையிலுள்ள முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்(30) இவர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டு இன்று மதியம் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதே போல ராஜீவ் நகரில் வசிக்கும் சரவணன் என்ற லாரி உரிமையாளர் வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகைகளையும் திருடிச் சென்றனர்.
மேலும் எம்ஆர் நகரைச் சேர்ந்த பகுத்தறிவு என்பவர் வீட்டிலும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 10 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி கொலுசை திருடிச் சென்றனர்.
இந்த மூன்று சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் வெளியூர் சென்றிருந்த நிலையில் இன்று மதியத்திற்கு மேல் வீடு திரும்பியபோது இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மூவரும் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர போலீசார் வழக்குப்பதிந்து பூட்டியிருந்த வீடுகளில் 4.5 இலட்சம் மதிப்பிலான தங்கம் வெள்ளி பொருட்களை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள வீட்டில் இரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருட முயற்சிக்கும்போது, இதை மாடியிலிருந்து கண்டவர்கள் கூச்சலிட்டதால், திருடர்கள் துப்பாக்கி பட்டாக்கத்தி ஆகியவற்றை கையில் வைத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர், பெரம்பலூர் நகர மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நடைபெறும் இது போன்ற திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.