திருடுபோன ரூ.32 லட்சம் மதிப்புள்ள 160 செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு
நாமக்கல் மாவட்டத்தில், காணாமல் போன ரூ.32 லட்சம் மதிப்புள்ள, 160 மொபைல் போன்களை, போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில், காணாமல் போன மொபைல் போன்களை கண்டுபிடித்து தரவேண்டும் என, பொதுமக்களிடம் இருந்து, போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையொட்டி மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரில், சைபர்கிரைம் ஏடிஎஸ்பி செல்ல பாண்டியன் தலைமையில், காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையின் தீவிர முயற்சியால், கடந்த, செப்.9ம் தேதி 301 மொபைல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தற்போது ரூ. 32 லட்சம் மதிப்புள்ள, 160 செல்போன்கள் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை, எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர் பார்வையிட்டு, உரிய நபர்களிடம் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலையில் உள்ளவர்கள், மலைப்பகுதியில் வேட்டையாட லைசென்ஸ் பெறாமல் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கிகளை வைத்துள்ளவர். அவற்றை தடுக்கும் வகையில், மாவட்ட எஸ்.பி. பொதுமக்களிடம், தாமாக முன்வந்து துப்பாக்கிகளை, போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டோம் என தெரிவித்தார்.
இதுகுறித்து, போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து, அக். 10 வரை, 80 லைசென்ஸ் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. தற்போது மேலும், 42 லைசென்ஸ் இல்லாத நாட்டு துப்பாக்கிகள், போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் வழியாக, பிற மாவட்டங்களுக்கு, தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவதாக, எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூருக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில், டி.எஸ்.பி சுரேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியன், எஸ்.ஐ பூபதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, 2 மினி லாரிகளில், குட்கா பொருட்கள், தஞ்சைக்கு கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுக்கா, உன்னியூரை சேர்ந்த டிரைவர் தமிழ்வாணன் (38), திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை சேர்ந்த டிரைவர் சுரேஷ் (38) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.58 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.