புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை : ஆட்சியர் எச்சரிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கடந்த 2 நாட்களாக மங்களபுரம், மெட்டாலா மற்றும் மோகனூர் பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட 30 கடைகளில் தடைசெய்யப்பட்ட கூல் லிப், ஹான்ஸ் போன்ற போதை புகையிலைப் பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் 6 கடைகளிலிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான ஹான்ஸ் 2.6 கி.கி (110 பாக்கெட்) மற்றும் விமல் பாக்கு 0.925 கி.கி (85 பாக்கெட்) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு ரூ.12,300/- அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. மேலும், அவர்கள் மீது காவல் துறையின் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் இடத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவிற்கு புகையிலைப் பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட கூல் லிப், ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் விற்பது தெரியவந்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள், தடைசெய்யப்பட்ட கூல் லிப் மற்றும் ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் கடைகளில் விற்பது தெரியவந்தால், உடனடியாக 1098 மற்றும் 9486111098 என்ற தொலைபேசி எண்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும். தகவல் கொடுப்பவரின் ரகசியம் பாதுகாக்கப்படும்.
இனிவரும் காலங்களில் நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் செயல்படும் கடைகள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.