மாநில அளவிலான கபடிப் போட்டி: ஜேடர்பாளையம், குன்னிபாளையம் அணிகள் வெற்றி
மோகனூர் அருகே நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் குன்னிபாளையம் அணியும், பெண்கள் பிரிவில் ஜேடர்பாளையம் அணியும் வெற்றிபெற்று முதல் பரிசு பெற்றன.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், மணப்பள்ளி அருகில் உள்ள மேலப்பேட்டபாளையத்தில், சதீஷ் பிரதர்ஸ் மற்றும் நண்பர்கள் குழு சார்பில், 14ம் ஆண்டு மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் கபடி போட்டி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்றது. ஊர் முக்கியஸ்தர் கணேசன் தலைமை வகித்தார். தி.மு.க ஒன்றிய பொறுப்பாளர் நவலடி, சண்முகம், மணப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெண்களுக்கான கபடி போட்டியில், நாமக்கல், கரூர், சென்னை, புதுக்கோட்டை, திருவாரூர், கோவை, திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 35 அணிகள் பங்கேற்றன. அதில், ஜேடர்பாளையம் பல்லவன் அணி முதல் பரிசும், திருவண்ணாமலை அணி இரண்டாம் பரிசும், மோகனூர் காந்தமலை கபடி சங்கம் மூன்றாம் பரிசும், கோவை ரத்தினம் கல்லூரி அணி, நான்காம் பரிசும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, முறையே ரூ. 15 ஆயிரம், 12,500, 10ஆயிரம், 8,000 மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
ஆண்களுக்கான போட்டியில், நாமக்கல், கரூர், திருச்சி, திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 45 அணிகள் கலந்து கொண்டன. அதில் குன்னிப்பாளையம் கண்ணீர் துளி அணி முதலிடம் பெற்றது. கரூர் செவ்வந்திபாளையம் எவரெஸ்ட் அணி இரண்டாம் இடமும், மேலப்பேட்டபாளையம் சதீஸ் பிரதர்ஸ் அணி, 3ம் இடமும், கரூர் கமலா ஸ்போர்ட்ஸ் கிளப் 4ம் இடமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, முறையே ரூ. 20 ஆயிரம், 17 ஆயிரத்து 500, 15 ஆயிரம், 12 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பரிசும், சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. திரளான பொதுமக்கள் கபடி போட்டியைக் கண்டு ரசித்தனர்.