ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரபிரசாத் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலவிநாயகம் வரவேற்றார். கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல் மற்றும் மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கும் வழங்கி உரிய அரசு உத்தரவுகள் வெளியிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட கம்ப்யூட்டர் உதவியாளர்கள் அனைவருக்கும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசு உத்தரவின்படி இளநிலை உதவியாளர்களுக்கு இணையான சம்பளம் நிர்ணயம் செய்து பணிவரன்முறை செய்ய வேண்டும். முழு சுகாதார திட்ட வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையிலிருந்து உதவி இயக்குநர் நிலையிலான பதவி உயர்வுகளை மேலும் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும். வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணி மேற்பார்வையாளர் பணியிடங்கள் அனைத்தையும் தேர்வாணையம் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட நிர்வாக நிதியினை மேலும் காலதாமதம் இன்றி அனைத்து வட்டாரங்களுக்கும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர்லோக மணிகண்டன் நன்றி கூறினார்.