மண் வளத்தை காக்க விவசாயிகள் பசுந்தாள் உரங்களை பயன்படுத்த அறிவுரை
மண்வளத்தைக் காத்திட விவசாயிகள் பசுந்தாள் உரங்களைப் பயிரிட்டு பயன்படுத்த வேண்டும் என்று வேளாண்மைத்துறை வேண்டுகோள்விடுத்துள்ளது.
HIGHLIGHTS
இது குறித்து, நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறை உதவி இயக்குனர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
விவசாயிகள் பசுந்தாள் மற்றும் பசுந்தளை உரப்பயிர்கிளை நிலத்தில் பயிரிட்டு, வயலில் மடக்கி உழவு செய்ய வேண்டும். இதன்மூலம் மண்ணில் தழைச்சத்தை அதிகரிக்கலாம். ரசாயன உரங்களை தொடர்ந்து இட்டதால், மண்ணில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சீர் செய்யலாம். மண்ணில் காற்றோட்டம் மற்றும் பொலபொலப்பு தன்மை அதிகரிக்கும். மண்ணில் நுண்ணுயிர்கள் வெகுவாக மற்றும் வேகமாகப் பெருகும். மண்புழுக்கள் எண்ணிக்கை உயரும். மண்ணின் நீர் பிடிப்பு தன்மை அதிகரித்து, மண் அரிமானத்தினை தடுக்கலாம். தக்கைப் பூண்டு தொடர்ந்து பயிரிடுவதால் மண்ணின் களர் தன்மை முற்றிலும் மாறும்.
தக்கை பூண்டு, மணிலா அகத்தி, கொளுஞ்சி, சணப்பு ஆகிய பசுந்தாள் பயிர்கள் குறைந்த வயதில் அதிக தழைச்சத்தை கொடுத்து, வறட்சியை தாங்கும் தன்மையுடையவை. இவற்றை சாகுபடி செய்து வயலில் மடக்கி உழவு செய்ய வேண்டும். பசுந்தாள் உரப்பயிர் வளர்க்க முடியாவிட்டால் வயல் வரப்பு மற்றும் இதர இடங்களில் தானாகவே வளர்ந்துள்ள கொளுஞ்சி, ஆவாரை, சுபாபுல், எருக்கு, வேம்பு மற்றும் புங்கம் ஆகியவற்றின் கிளைகளை வெட்டி வயலில் இட்டு மக்கும்படி மடக்கி உழுது பசுந்தளை உரமாக பயன்படுத்தலாம்.
தற்சமயம் பெய்து வரும் பருவ மழையை பயன்படுத்தி பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்து மடக்கி உழவு செய்தும், அல்லது பசுந்தளை கிளைகளை வெட்டி வயலில் இட்டு நீர் கட்டி வைத்திருந்து 10 நாட்கள் கழித்து உழவு செய்தும், மண்ணின் வளத்தை அதிகரித்து அதிக மகசூல் பெறலாம் என்று, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.