சுத்தகரிக்காத கழிவுநீர் வெளியேற்றினால் நடவடிக்கை: எம்.பி கோரிக்கை
சுத்தகரிக்காமல் கழிவுநீரை வெளியேற்றும் சாய தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நாமக்கல் எம்.பி சின்ராஜ் வலியுறுத்தினார்.
HIGHLIGHTS
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் சாயத் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த ஆலைகள் கழிவு நீரை வெளியேற்ற பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் உள்ளன. இதனையும் மீறி காவிரி, நொய்யல் ஆறுகளில், சுத்திகரிக்காமல் கழிவு நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்று நீர், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
சாயக்கழிவுகள் வெளியேற்றுவதால், ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்திட ஆலைகள் மீது கடந்த 2014-2021-ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தொடரப்பட்ட கிரிமினல் வழக்குகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பார்லிமெண்டில், கேள்வி எழுப்பினேன். இதுவரை எந்த குற்ற வழக்குகளின் மீதும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே பதிலளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் காவிரி, நொய்யல் ஆறுகளைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். சுத்திகரிக்காமல் கழிவு நீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.