திமுகவுக்கு பார்லி. தேர்தலில் பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள் : பாஜ மாநில துணைத்தலைவர்
திமுகவுக்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்று பாஜக மாநில துணைத்தலைவர் கூறியுள்ளார்.
HIGHLIGHTS
திமுகவுக்கு பார்லி. தேர்தலில் பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள்: பாஜ மாநில துணைத்தலைவர் துரைசாமி பேட்டி
நாமக்கல் :
தமிழகத்தில் மக்களுக்கு நல்லது செய்யாத திமுகவிற்கு, வருகிற 2024 பார்லி தேர்தலில் பொதுமக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று பாஜக மாநில துணைத்தலைவர் துரைசாமி கூறினார்.
தமிழக பாஜக துணைத்தலைவரும், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளருமான வி.பி.துரைசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாமக்கல் வந்நதார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் கடந்து 9 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்று வரும் பாஜக ஆட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறுவதற்காக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற நடைப்பயணத்தை இந்துக்களின் புனித பூமியான ராமேஸ்வரத்தில் துவக்கி உள்ளார். இந்த பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்துள்ளார். இதில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினுக்கு என்ன கவலை. அவர், இந்த சுற்றுப்பயணத்தை தரக்குறைவாக விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.
ஆடம்பர அரசு விழாக்கள்:
தமிக முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு ஊராகச் சென்று ஆடம்பர அரசு விழாக்களை நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்களை அறிவிக்கிறார். அதில் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் அறிவார்கள். வெறும் விளம்பரத்திற்காக நடத்தப்படும் தமிழக அரசு விழாக்களை பாஜக விமர்சிப்பதில்லை. இந்த நிலையில் ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் அரசியல் ரீதியாகவும், அலுவல் காரணங்களுக்காகவும் இந்தியாவின் எந்த மாநிலத்திற்கும் செல்லலாம்.
அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சரை, தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். திமுகவினரும், திமுக அரசும், தமிழகத்தில் மக்களுக்கு நல்லது செய்யாத அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. வருகிற 2024ம் ஆண்டில் நடைபெற உள்ள பார்லி தேர்தலில் பொதுமக்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். அனைத்து தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவுவது உறுதியாகிவிட்டது.
பெண்கள் உரிமைத்தொகை:
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வாக்குறுதியில், திமுக வெற்றிபெற்ற ஆட்சி அமைத்தால், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தனர். திமுக பொறுப்பேற்று 28 மாதங்கள் நிறைவுபெற்றுள்ளது. இப்போது தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த திட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த திட்டத்திற்கான மனுக்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் ஊர் ஊராக சுற்றுப்பயணம் செய்கின்றனர்.
உரிமைத்தொகை கொடுக்கும்போது எத்தனை அமைச்சர்கள் வருவார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள். பொதுமக்களிடம் பெறும் மனுக்களில் எத்தனை சதவீதம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்பதை தமிழக அரசு அறிவிக்கவேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்துவிட்டு, மிகக்குறைந்த நபர்களுக்கு உதவித்தொகை வழங்கும் வகையில் இந்த திட்டத்தில் மாற்றம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்துவிட்டு, அனைத்து குடும்ப பெண்களையும் முகாம்களில் வரிசையில் நிற்க வைத்து ஏமாற்று வேலையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இது பாவம் அல்லவா. அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் திமுக ஆட்சி பொறுப்பேற்று 28 மாதத்திற்குமான தொகை ரூ. 28,000 சேர்த்து அடுத்து மாதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்கு விசாரணை :
இந்தியா முழுவதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளவர்களிடம் சோதனை நடத்தவும், விசாரணை நடத்தவும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. இந்த நிலையில்தான் தமிழகத்தில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி மற்றும் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, தவறு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதால், செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். விசாரணை முழுமையாக நடைபெற்று முடியும் வரை அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க கூடாது என அரசியல் சட்டம் கூறுகிறது. இதற்கு ஒத்துழைக்காமல் அவரை தொடர்ந்து அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதில், தமிழக முதல்வர் முழுமூச்சாக செயல்பட்டு வருவது, பொதுமக்களிடம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
குடும்ப அரசியல் :
இந்தியாவின் ஒற்றுமையையும், பாதுகாப்பையும் காப்பாற்றி, பொருளாதார ரீதியில் உலக நாடுகளில் முன்னிலை வகிக்கும் வகையில், பாஜக கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சி நடத்திவருகிறது. இந்த சந்தர்ப்பவாத கூட்டணியைப் பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? குடும்ப அரசியலை ஒழிப்போம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்து, பாஜகவிலும் வாரிசு அரசியல் உள்ளது என்று கூறியுள்ளார். அமித்ஷா கூறுவது தமிழகத்தை மட்டுமல்ல மேற்குவங்கம், பீகார், கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் குடும்ப அரசியல் ஒழிய வேண்டும் என்றுதான் கூறினார். இவ்வாறு துரைசாமி கூறினார்.