திமுக அரசைக் கண்டித்து நாமக்கல்லில் அதிமுக ஆர்ப்பாட்டம்.. முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்பு...
திமுக அரசைக் கண்டித்து, நாமக்கல்லில் அதிமுக சார்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் சொத்து வரி, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து நாமக்கல் நகர அதிமுக சார்பில், நாமக்கல்லில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கர் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சேகர், செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான தங்கமணி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்துப் பேசியதாவது:
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைக் கைப்பற்றி, ஸ்டாலின் தமிழக முதல்வராகி உள்ளார். திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என்று கூறினார்கள். இதுவரை அதனை கொடுக்கவில்லை.
இளம்பெண்களுக்கு திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி உள்ளனர். மின் கட்டணத்தை குறைப்போம் என்று கூறிவிட்டு தற்போது 52 சதவீதம் வரை மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். வருகிற ஜூன் மாதம் முதல் மீண்டும் 6 சதவீதம் மின் கட்டணம் அதிகரித்து 77 சதவீதம் உயர்த்த உள்ளதாக தெரிகிறது. இதனால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர பால் விலை, சொத்து வரி உயர்வாலும் பொது மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். குப்பை வரி என்று புதிதாக தொடங்கி மாதம் 30 முதல் 50 ரூபாய் வரை வசூல் செய்கின்றனர். அதிமுக இடைகக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 138 நகராட்சிகளில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் பேர் திமுக அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்த 8 மாதத்துக்குள் 26 கொலைகள் நடந்துள்ளதாக போலீஸ் அதிகாரியே கூறுகிறார். பள்ளிக்கூடம் முன்பு கஞ்சா விற்பனை நடக்கிறது. மாநிலம் முழுவதும் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை மற்றும் சந்துக்கடைகளில் 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை நடைபெறுகிறது.
இதில் இருந்தே தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளது என்பதை அனைவரும் அறிய முடியும். விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி திமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதற்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இந்த ஆட்சியில் நடைபெறும் கொடுமைகளை அதிமுகவினர் பொதுமக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட அதிமுக பொருளாளர் காளியப்பன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், இளைஞரணி செயலாளர் சந்திரசேகரன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முரளி பாலுசாமி, கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர்கள் விஜய்பாபு, கமால்பாஷா, முன்னாள் நகர செயலாளர் ஆட்டோராஜா, மகளிரணி சுமதி உள்ளிட்ட சுமார் 2,000-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.