நாமக்கல்லில் கருணாநிதிக்கு சிலை: மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம்
நாமக்கல்லில் கருணாநிதிக்கு சிலை அமைக்க மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல்லில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் மூலம் பிரமாண்டமாக சிலை திறப்பு விழா நடத்துவதென்று மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஸ்குமார் முன்னிலை வகித்தார். தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
நாமக்கல் நகரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை அவருக்கு முழு உருவ சிலையினை அமைத்து, தமிழக முதல்வரை அழைத்து பிரமாண்டமாக சிலை திறப்பு விழாவை நடத்துவது. நாமக்கல் கிழக்கு மாவட்டம் முழுவதும், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றை ஒரு ஆண்டு முழுவதம் தொடர்ந்து நடத்தப்படும், வருகின்ற ஜீன் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று, கிராமங்கள் தோரும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், எங்கெங்கும் கலைஞர் என்ற அடிப்படையில் கருணாநிதியின் முழு உருவச்சிலை, மார்பளவு சிலைகள் மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றிய, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் அமைப்பதற்கு, அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, அனுமதி பெற்று சிலை அமைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. திமுக இளைஞர் அணி சார்பில் சாதனை பொதுக் கூட்டங்களை நடத்துவது என்று மற்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, டவுன் பஞ்சாயத்து திமுக நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.