நாமக்கல்: அகதிகள் முகாம் மோதல் தொடர்பாக 17 பேர் கைது
நாமக்கல் அருகே, இலங்கை அகதிகள் முகாமில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், எம்.மேட்டுப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாமில், துஷ்யந்தன் (20) என்பவருக்கும், ஸ்ரீதரன் (57) என்பவரின் மகன்கள் தினேஷ்குமார் (22), புவேந்தன் (24) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக, அடிக்கடி தகராறு நடைபெற்று வந்தது.
இதேபோல், அண்மையில், இரவில் ஆட்டோவில் வந்த தினேஷ்குமாரிடம், துஷ்யந்தன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்து தினேஷ்குமாரின் தந்தை மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து துஷ்யந்தனுடன் மோதலில் ஈடுபட்டனர். துஷ்யந்தனுக்கு ஆதரவாக அவரது நண்பர்கள் சிலர் அங்கு வந்ததால் இருதரப்பிற்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, ஸ்ரீதரன் தரப்பினர், தன்னை கத்தியால் குத்தியதாகக்கூறி, துஷ்யந்தன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தார். அவர் தனக்குத் தானே கத்தியால் வெட்டிக் கொண்டு நாடகமாடுவது கூறி ஸ்ரீதரன் தரப்பினர் மறுத்தனர். பின்னர் ஸ்ரீதரன் கோஷ்டியினர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். இரவு 10.30 மணியளவில் ஆம்புலன்ஸில் இருந்து கீழே இறங்க முயன்ற துஷ்யந்தனை 5 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் வெட்டியதாகத் தெரிகிறது.
இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். காயமடைந்த துஷ்யந்தனுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எருப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்.மேட்டுப்பட்டி அகதிகள் முகாமில் நடைபெற்ற மோதல் சம்மந்தமாக 12 பேரை கைது செய்தனர்.
இதேபோல், நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற மோதல் தொடர்பாக, நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். இருதரப்பையும் சேர்ந்த மொத்தம் 17 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.