மெக்சிகோவில் பலூன் திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் பங்கேற்பு
மெக்சிகோவில் நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்றார்.
HIGHLIGHTS
மெக்சிகோவில் நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்றார்.
சர்வதேச பலூன் திருவிழா மெக்சிகோ நாட்டின் லியோன் நகரில் ஆண்டுதோறும் நடை பெற்று வருகிறது. இத்திருவிழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர். இந்த ஆண்டு, 20வது சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்றது.
இந்த விழாவில் இந்திய சுற்றுலாத் துறையின் சார்பாக தமிழக சுற்றுலா துறையின் பிரதிநிதிகளாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், சுற்றுலா இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆகியோர் பங்கேற்றனர். 9 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில், 200க்கும் மேற்பட்ட பலூன்கள் பறக்க விடப்பட்டன.
இந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாக இந்திய சுற்றுலாத்துறையை முன்னிலைப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாட்டில் சுற்றுலாவின் பெருமையை நிலைநிறுத்தும் வித மாகவும் இந்திய தேசியக்கொடி வண்ணத்தில் அமைக்கப்பட்ட சுற்றுலாத்துறையின் முத்திரைகள் பொறிக்கப்பட்ட பலூன் பறக்க விடப்பட்டது.