மோகனூர் ஸ்ரீ ராஜநாகலட்சுமி அம்மன் கோயிலில் வளைகாப்பு விழா
மோகனூர் ராஜநாகலட்சுமி அம்மன் கோயிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற வளைகாப்பு விழாவில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகில் உள்ள, ராசிபாளையம், மாருதி நகரில், பிரசித்தி பெற்ற ராஜநாகலட்சமி அம்மன், சங்கபால நாகராஜர் கோயில் உள்ளது. ராகு, கேது தோஷ பரிகார ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில், ஆண்டு தோறும், ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை, அம்மனுக்கு வளைகாப்பு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமையான நேற்று, ராஜநாகலட்சுமி அம்மனுக்கு, 23ம் ஆண்டு வளைகாப்பு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, காலை, 10 மணிக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
காலை, 10:30 மணிக்கு சுமங்கலி பூஜையும், 11:00 மணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு, வளையல், மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, பூ உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.