மலைவாழ் கிராமங்களுக்கு சாலை வசதி - கலெக்டர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
மலைவாழ் மக்கள் வாழும் குக்கிராமங்களுக்கு சாலை அமைப்பது குறித்த ஆய்வுக் கூட்டம், கிருஷ்ணகிரி கலெக்டர் தலைமையில் நடந்தது.
HIGHLIGHTS
குறைவான மக்கள் தொகை கொண்ட, இணைப்பு சாலை இல்லாத குக்கிராமங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வாழும் குக்கிராமங்களுக்கு சாலை அமைத்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடந்தது.
கூட்டத்திற்கு, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது: மாவட்டத்தில் இணைப்பு சாலை இல்லாத மலைவாழ் மக்கள் வாழும் குக்கிராமங்கள் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு சாலைகள் அமைக்க, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, வனத்துறை ஆகிய துறைகளின் மூலம் இணைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மலைவாழ் மக்கள் மற்றும் குக்கிராமங்களில் வாழும் பொதுமக்கள் சாலை வசதிகள் பெறும் வகையில் அனுதிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 15 நாட்களுக்குள் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு, கருத்துரு தயார் செய்து அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று பேசினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் பிரபு, மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) மலர்விழி, உதவி செயற்பொறியாளர்கள் (ஊரக வளர்ச்சி), தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.