காஞ்சிபுரத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் பெண்களுடன் மகளிர் தின விழா
காஞ்சிபுரம் அடுத்த காரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
HIGHLIGHTS
உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிரின் தன்னலமற்ற சேவையை பாராட்டும் வகையில், அவர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. மேலும், இன்று தமிழகம் முழுவதும் அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள், மகளிர் தினத்தை தம் அலுவலகங்களில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
அவ்வகையில், காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை காரப்பேட்டையில் அமைந்துள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் மகளிர் தின விழா இயக்குனர் சீனிவாசன் தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதையொட்டி, நேற்று முதல் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் என பலர் மகளிர் தின விழாவினையொட்டி பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்டனர். இந்த நிலையில் இன்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள சங்கரா ஹாலில் மகளிர் தின விழா கொண்டாட்டம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இதில் நிலைய மருத்துவ அலுவலர் சிவகாமி, வழக்கறிஞர் ரேவதி வாசுதேவன், பேராசிரியர் சக்தி உஷா தேவி ஆகியோர் பங்கேற்று மகளிர்களுக்கு மகளிர் தின விழா கருத்துக்களையும், போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பட்டு சேலை, ஹாட் பாக்ஸ் மற்றும் பல்வேறு பரிசு பொருட்கள் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு சார்பில் வழங்கப்பட்டது.
குறிப்பாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் நோயாளிகள், ஆண் நோயாளிகளுக்கு உறுதுணையாக இருக்கும் பெண் உறவினர்களும், மிகுந்த மன உளைச்சலில் இருக்கும் நிலையிலும் மருத்துவமனை நிர்வாகம் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மகளிர் தின விழாவில் பங்கேற்க வைத்து மீண்டும் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது அனைத்து தரப்பிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வெற்றி பெற்ற பெண் நோயாளிகள் பரிசு வாங்கும் போது அவர்களின் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சியும் இதனை கொண்டாட ஊக்குவித்த மருத்துவர்களுக்கும் மேடையிலே நன்றி தெரிவித்தனர். விழாவில் உதாசின் பாவாஜி மடாதிபதி மஹந்த் அனுபவானந் சுவாமிஜி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொது செயலாளர் கோபிநாத், பிரபல தொழிலதிபர் ராஜேஷ் ஜெயின், முன்னாள் நிலைய மருத்துவ அலுவலர் மனோகரன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.