மனு அளிக்க காரை மறித்த பொதுமக்கள், காரை விட்டு இறங்கி மக்கள் குறைகளை கேட்ட ஆட்சியர்
உத்திரமேரூர் அடுத்த மல்லிகாபுரம் பகுதி மக்கள் பட்டா வழங்க கோரி மக்கள் தொடர்பு முகாமுக்கு சென்று திரும்பிய போது ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை வழிமறித்த மல்லிகாபுரம் கிராம மக்களுக்காக காரை விட்டு இறங்கி மக்கள் குறைகளை கேட்டு அரசு விதிகளின் படி நடவடிக்கை எடுக்கபடும் என மாவட்ட ஆட்சியர் கூறிய செயல் வரவேற்பை பெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அகரம்தூளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.அதில் கலந்து கொள்வதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது உத்திரமேரூர் அடுத்த மல்லிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை ஓரம் நின்று மாவட்ட ஆட்சியரின் காரை வழிமறித்தனர்.
உடன் காரை ஓரமாக நிறுத்த சொன்ன மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காரில் இருந்து இறங்கி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்கள் கையில் வைத்திருந்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அப்போது கிராம மக்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுமனை பட்டா வழங்கும் பொழுது பத்து நபர்களுக்கு விடுபட்டு போனதாகவும், விடுபட்டது அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றும் கால்வாய் வசதி உட்பட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அதனை கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், அரசு விதிகளின்படி கோரிக்கை மனுக்கள் விசாரணைக்கு உட்பட்டு, அதன் அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்து அங்கிருந்து கிளம்பினார்.
மாவட்ட ஆட்சியரின் வாக்குறுதியால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரின் காரை திடீரென பொதுமக்கள் வழிமறித்த நிலையில் உடனடியாக காரை சற்று தள்ளி ஓரமாக நிறுத்தி குறைகளைக் கேட்டிருந்த செயல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.