9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறப்பு
திண்டுக்கல்லில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளிகளும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டது. கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் தற்போது ஆன்லைன் வகுப்புகள் மூலம் படித்து வந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது குறைய தொடங்கியுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு அளித்துள்ள ஊரடங்கு தளர்வுகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க இன்று முதல் அனுமதி அளித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 180 அரசு பள்ளிகளும், 215 மெட்ரிக் மற்றும் தனியார பள்ளிகள் உள்ளன. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்தி 5000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் என இதுவரை 96% பேருக்கு கொரானா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டனர். சுழற்சி முறையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் இன்று முதல் எடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளிவாயிலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட அனுமதிக்கப்படவில்லை. வகுப்பறைகளில் போதிய சமூக இடைவெளியுடன் மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்கள் பாடங்களை பயிற்றுவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இந்த பணிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் எட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கல்லூரிகளிலும் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.