ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் பேட்டி
வேங்கிக்கால் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறும் வழியை மறித்து பூங்கா கட்டியதால் தான் மழைநீர் சாலையில் செல்வதாக அமைச்சர் கூறினார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரி நிரம்பி உபரி நீர் சாலையில் செல்வதை பார்வையிட்ட அமைச்சர் வேலு, போர்க்கால அடிப்படையில் சரி செய்வது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை வழங்கினார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 35 ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலை மாவட்டத்தில் கன மழை பெய்திருக்கிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களில் மட்டும் திருவண்ணாமலையில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது . மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரிக்கு மலைகளிலிருந்து ஆடையூர் வழியாக தண்ணீர் வருகிறது அதிலிருந்து தண்ணீர் வெளியேற வழியின்றி சாலைகளில் கடந்து செல்கிறது. எனவே அடுத்த மழைக்குள் இந்த பகுதியில் பாலம் கட்டப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், தற்போது 10 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெள்ளாறு பகுதியில் அதிக அளவில் பயிர் சேதம் ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க எம்எல்ஏக்கள் இரவு பகலாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 37 சிறப்பு முகாம்களில் 1076 நபர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது அரசின் நோக்கம். வேங்கிக்கால் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறும் வழியை மறித்து கடந்த ஆட்சியில் பூங்கா கட்டியதால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வெள்ளம் வடிந்ததும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும்.
அதேபோல் திண்டிவனம் சாலையில் வெள்ளம் வெளியேறும் பகுதியில் இரண்டு பாலங்கள் கட்டப்படும். மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படும்.சேதமடைந்த சாலைகளை நிரந்தரமாக சீரமைக்கும் பணி விரைவில் நடைபெறும் என்று கூறினார்
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் முருகேஷ் , திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி , மாவட்ட உதவி ஆட்சியர் பிரதாப் , நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர்கள் , கோட்டப் பொறியாளர்கள் , உதவி கோட்ட பொறியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.