திருவண்ணாமலையில் சாலை பணியாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டம்
திருவண்ணாமலையில் சாலை பணியாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் திருவண்ணாமலை கோட்டம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திருவண்ணாமலை கோட்ட பொறியாளர் அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு கோட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். கோட்ட இணை செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் விளக்க உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் முத்து போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் மகாதேவன், பொது செயலாளர் அம்சராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், சாலை பணியாளர்களுக்கு கருவி, தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.
பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் இறந்த சாலை பணியாளர் வாரிசுகளுக்கு பணி வழங்க பரிந்துரை செய்ய வேண்டும். சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் சாலை பணியாளர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.