ஊரக வளர்ச்சி துறை வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரதாப் முன்னிலை வகித்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாஸ்கரன் வரவேற்றார். கூட்டத்தில் மத்திய அரசு, மாநில அரசின் நிதி ஒதுக்கிட்டின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் மீதான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கப்பட்டது.
தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) ஆகிய மத்திய, மாநில அரசு வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காகவும், சிறந்த முறையில் செயலாக்கம் செய்த ஒன்றியங்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையை சேர்ந்த பணிமேற்பார்வையாளர்கள், சாலை ஆய்வாளர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோரை பாராட்டி பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் உதவி திட்ட அலுவலர்கள் அருண், உமாலட்சுமி, நாகேஷ்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சி) சுரேஷ்குமார் உதவி இயக்குனர்கள் (தணிக்கை) கருணாநிதி, யுவராஜ், ஆட்சியர்ரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திருமால் உள்பட அனைத்து பிரிவு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.