திருவண்ணாமலை: ரவுண்டானா அமைய உள்ள இடத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆய்வு
திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் அருகே ரவுண்டானா அமைக்கப்படவுள்ள பகுதியினை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை - போளூர் சாலையில் அண்ணா நுழைவு வாயில் அருகே 3 முக்கிய சாலை சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் புதிதாக ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது.
அதற்கான முன்னோட்டமாக அந்த இடத்தில் பேரிகார்டுகள், மணல் மூட்டைகள் வைத்து தற்காலிகமாக ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அந்த பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுகிறதா, விதிமுறைகளை கடைபிடித்து வருகின்றனரா, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறதா என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரவுண்டானா அமைக்கப்பட உள்ள பகுதியினை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ரவுண்டானா அமைப்பு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது அவர் கூறும்போது
திருவண்ணாமலை நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருவதால் அதற்கு தேவையான வளர்ச்சி பணிகள் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள முக்கிய சாலைகளில் ஒன்றாகும். பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு நகரின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் முருகேஷ் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், கூடுதல் ஆட்சியர் பிரதாப், வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் கலைமணி, தி.மு.க. நகரசெயலாளர் கார்த்திவேல்மாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளர் டி.வி.எம்.நேரு, பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.