திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்
திருவண்ணாமலையில் பௌர்ணமியொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலையில் பௌர்ணமியொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபாடுவதால் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்.
இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பௌர்ணமி நேற்று மாலை சுமார் 6.47 மணியளவில் தொடங்கியது. இதையொட்டி நேற்று விடுமுறை நாள் என்பதால் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். பகலில் மிதமான வெயில் கொளுத்தியது. இருப்பினும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
பௌர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.50 கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே அறநிலையத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
ஆனால் பகலில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களிடம் இருந்த கட்டண தரிசன டிக்கெட் ரூ.50 வசூலிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து புகார்கள் எழுந்ததை தொடர்ந்து மதியத்திற்கு மேல் ரூ.50 கட்டணம் தரிசனம் வசூலிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் அனைவரும் பொது தரிசனம் மேற்கொள்ள கோவில் நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பக்தர்கள் அனைவரும் நீண்ட பொது தரிசனம் வழியில் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
மாலை சுமார் 5 மணிக்கு மேல் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் வழிபாடு செய்தனர். பௌர்ணமி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 வரை உள்ளதால் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் கோரிக்கை
கிரிவலப் பாதையில் அக்னி குளம் அருகே திருநங்கைகள் கூட்டமாக நின்று கிரிவலம் வரும் பக்தர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், தரவில்லை என்றால் அவர்களாகவே சட்டை பைக்குள் கைவிட்டு எடுத்துக் கொள்வதாகவும் நள்ளிரவு நேரத்தில் அந்த கூட்டத்திலும் தங்களிடம் உள்ள பொருட்களை பிடுங்குவதாகவும் பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் அப்பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.
இப்பகுதியில் காவல்துறையினர் இல்லாததால் கஞ்சா மற்றும் குடிபோதையில் சாதுக்கள் என்று கூறிக்கொண்டு அவர்கள் செய்யும் அட்டகாசமும் தாங்க முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்
கிரிவலப் பாதையில் அரசு கலைக் கல்லூரி முதல் கிரிவலப் பாதை முடிவு வரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த அக்னி குளம் பகுதி முதல் அரசு கலைக் கல்லூரி வரை குறைந்த எண்ணிக்கையில் போலீசார் உள்ளதால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக பக்தர்கள் தெரிவித்தனர், எனவே இப்பகுதியிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பக்தர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்