மாணவர்களை கொண்டு பள்ளிகளை சுத்தம் செய்தால் நடவடிக்கை என எச்சரிக்கை
மாணவர்களை கொண்டு பள்ளிகளை சுத்தம் செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை சி.இ.ஓ. எச்சரித்துள்ளார்.
HIGHLIGHTS
தமிழக அரசு உத்தரவுப்படி ஏற்கனவே உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி திறக்கப்பட்டு மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் வரும் 1ஆம் தேதி முதல் தொடக்க பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள் தூய்மை செய்யும் பணியில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.இந்த பணிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது
இந்நிலையில் புதுக்கோட்டை சந்தப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் பள்ளி வளாகம் தூய்மையாக உள்ளதா கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளதா மற்றும் வகுப்புகளில் மாணவ- மாணவிகள் அமரும் மேஜை, நாற்காலிகள் தூய்மை செய்யும் பணியையும் ஆய்வு செய்தார்
இதன் பின்னர் செய்தியாளர்கள் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1903 அரசு பள்ளிகள் உள்ளன.இதில் 1,200 பள்ளிகள் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளாக உள்ளது. இதில் இரண்டு லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் வரும் 1ஆம் தேதி முதல் அரசு உத்தரவுப்படி திறக்கப்பட உள்ளது அரசு வழிகாட்டுதலின்படி விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
மேலும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அதற்கான சான்றிதழை பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது
மாவட்டத்தில் 100 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு விட்டனர். மாணவ- மாணவிகளின் நலன் முக்கியம் என்று அறிவுறுத்தப்பட்டு 100 நாட்கள் வேலைத்திட்ட பணியாளர்களைக் கொண்டு தான் பள்ளிகளை சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.மாணவர்களைக் கொண்டு பள்ளிகளை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.