தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!

தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!

உயிரிழந்த மகாலட்சுமி

தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறை பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர், சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மகாலட்சுமி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த செவ்வாய் இரவு தனியார் ஆம்னி பேருந்து மூலம் சென்னையில் இருந்து கோவைக்கு திரும்பியுள்ளார்.

பேருந்தில் கீழ் படுக்கையில் பயணம் செய்த மகாலட்சுமி கோவை காந்திபுரம் பகுதியில் நேற்று காலை பேருந்து நின்ற பிறகும் இறங்கவில்லை. இறுதியாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரிடம் காந்திபுரம் வந்த தகவலை கூற சென்ற போது, அவர் எழும்பாததால் சந்தேகமடைந்த அவர்கள் 108 ஆம்புலன்சிற்கு தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகாலட்சுமியை பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து தகவலறிந்து வந்த காட்டூர் காவல் நிலைய காவல் துறையினர் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சொகுசுப் பேருந்தில் இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story