திமுக தேர்தல் அறிக்கையில் நாமக்கல்லில் தனி முட்டை ஏற்றுமதி மண்டலம்
நாமக்கல்லில் தனி முட்டை ஏற்றுமதி மண்டலம் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த முதல்வருக்கு ராஜேஷ்குமார் எம்.பி. நன்றி தெரிவித்தார்
HIGHLIGHTS
நாமக்கல்லில் தனி முட்டை ஏற்றுமதி மண்டல அமைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளதற்கு, மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி., தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.
கடந்த மாதம் திமுக சார்பில் மக்களவை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் நாமக்கல் மண்டல கோழிப்பண்ணையாளர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, நாமக்கல்லில் தனி முட்டை ஏற்றுமதி மண்டலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, திமுக தேர்தல் அறிக்கையில் நாமக்கல்லில் தனி முட்டை ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி அதிகரிக்கும், மேலும், பறவைக்காய்ச்சல் போன்ற நோய்களால் வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால், நாமக்கல் பகுதியில் முட்டை ஏற்றுமதி பாதிக்காது. இதற்கு நாமக்கல் பகுதியைச் சேர்ந்த கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் முட்டை ஏற்றுமதியாளர்கள் தமிழக முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும் நாமக்கல் மாவட்டம் சோழசிராமணியில் இருந்து, ஈரோடு மாவட்டம் பாசூர் வரை ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் எனவும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இதன்மூலம் நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயனடைவார்கள்.
நாமக்கல் மக்களவை தொகுதியில், ஐஎன்டிஐஏ கூட்டணியின் சார்பில், கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதையொட்டி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் கூட்டணிக் கட்சித்தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை 22ம் தேதி காலை 10 மணிக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
25ம் தேதி திமுக கூட்டணி கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அன்று மாலை முதல் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெறும். வருகிற 31ம் தேதி நாமக்கல், கரூர் மற்றும் ஈரோடு மக்களவை தொகுதி திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற உள்ளது. அதில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்துகொண்டு பேச உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.