நாமக்கல்லில் குடியரசு தின விழா: கலெக்டர் தேசியக்கொடி ஏற்றிவைப்பு
நாமக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட கலெக்டர் தேசியக்கொடியை ஏற்றி ரூ. 59.23 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
HIGHLIGHTS
நாமக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட கலெக்டர் தேசியக்கொடியை ஏற்றி ரூ. 59.23 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், குடியரசு தின விழா, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தேசியக்கொடியை ஏற்றி வைத்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதைத்தொடர்ந்து போலீசார், ஊர் காவல்படையினர், என்எஸ்எஸ் மாணவ மாணவிகள், சாரண இயக்கத்தினர் அணிவகுத்து வந்து மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் குடியரசு தினவிழாவை முன்னிட்டு வண்ண பலூன்களையும், வெள்ளைப் புறாக்களையும் அவர் பறக்கவிட்டார். தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் இருக்கைக்கு சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கலெக்டர் கவுரவித்தார். சேலம் மண்டல கலை பண்பாட்டு மையத்தின் சார்பில் 15 கலைஞர்களுக்கு கலை முதுமணி, கலை நன்மணி, கலை சுடர்மணி, கலை வளர்மணி மற்றும் கலை இளமணிவிருதுகளை வழங்கினார்.
நாமக்கல்லைச் சேர்ந்த கிளாரினெட் வித்வான் பிரபு வேனுகோபாலிற்கு கலை சுடர்மணி விருது வழங்கப்பட்டது. பின்னர் அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அவர் வழங்கினார். விழாவில் வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை,தொழிலாளர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாவட்டத் தொழில் மையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் ரூ. 59 லட்சத்து, 23 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.
விழாவில் திரளான பள்ளி மாணவ மாகணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் நினைவுப்பரிசு வழங்கினார். மாவட்ட போலீஸ் எஸ்.பி கலைச்செல்வன், டிஆர்ஓ மணிமேகலை உள்ளிட்ட திரளான அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டனர்.