விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக பாஜக போராடும்: அண்ணாமலை
தமிழகத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக பாஜக போராட்டத்தில் இறங்கும் என அதன் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் ஏற்கனவே நடைபெற்று வந்த அதிமுக ஆட்சியில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன் ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்வதாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து, 31.01.2021 வரை விவசாயிகள் பெற்ற அனைத்து பயிர்கடன்களும், நகைக்கடன்களும் தள்ளுபடிசெய்யப்பட்டதாக, சம்மந்தப்பட்ட விசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. சட்டசபை தேர்தலின்போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், திமுக வெற்றிபெற்றால், விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன் மட்டுமல்லாது, அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றார். ஆனால் தற்போது, கடந்த ஆட்சியில் விவசாய கடன்கள் வழங்கப்பட்டதில், விதிமீறல் நடைபெற்றுள்ளதாகவும், விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களை திரும்பிச் செலுத்த வேண்டும் என்றும், அப்படி செலுத்துபவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவித்துள்ளார். இதனால் நாமக்கல் மா வட்டத்தில் 23 ஆயிரம் விவாயிகளும், சேலம் மாவட்டத்தில் 49 ஆயிரம் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே விதி மீறல் என்று தள்ளுபடி செய்யப்பட்ட கடனை மீண்டும் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு அறிவித்தபடி கடனை தள்ளுபடிö சய்ய வேண்டும் என்றும், புதிய கடனை உடனடியாக வழங்கக்கோரியும் விவசாய முன்னேற்றக்கழகம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாநில தலைவர் செல்லராஜாமணி போராட்டத்திற்கு தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் பொய் வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்வதாக கூறிவிட்டு, தற்போது ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட கடனையும் கட்ட வலியுறுத்துகிறது. இது ஆங்கில ஏகாதிபத்தியத்தை நினைவூட்டுகிறது. விவசாயிகள் அரசுக்கு கமிஷன் தர மாட்டார்கள் எனவே தமிழக அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது. கோவை மாவட்டம் அன்னூரில் டிட்கோ தொழிற்பேட்டை அமைக்க 3,822 ஏக்கள் விவசாய நிலத்தைகைப்பற்றுவதாக தமிழக அரசு அறிவித்து. அப்படி செய்தால் பாஜக சார்பில் கோட்டையை நோக்கிப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தோம்.
இதனால் தற்காலிகமாக டிட்கோ அந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. இனி தமிழக விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகளுக்கும் பாஜக முன்னின்று போராட்டத்தில் இறங்கும். எனவே விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு தங்களின் விவசாய பணிகளை கவனிக்கலாம் என்று கூறினார். திரளான விவசாயிகள் கையில் கரும்புகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். போராட்ட முடிவில் 15 நாட்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து, புதிய கடன் வழங்காவிட்டால் வருகிற ஜன.3ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுபோராட்டத்தில் ஈடுபடுவதென்று தீர்மானிக்கப்பட்டது.