நாமக்கல் மாவட்டத்தில் 86 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில், சமூக நலத்துறை சார்பில் 86 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் திருநங்கைகளுக்காக நலவாரியம் ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர், திருநங்கைகளும் சமூகத்தில் மற்றவர்களுக்கு சமமாக வாழும் வகையில், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கிட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.
அந்த வகையில், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
திருச்செங்கோட்டில் 43 திருநங்கைகள், நாமக்கலில் 43 திருநங்கைகள் என மொத்தம் 86 பேருக்கு அடையாள அட்டைகளையும், ஒருவருக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டும் வழங்கப்பட்டன. பின்னர், முகாம்களில் புதியதாக ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மருத்துவ இன்சூரன்ஸ் அட்டை, டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு பயிற்சி, சுயத்தொழில் தொடங்க கடன் உதவி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக திருநங்கைகள் மனு அளித்தனர்.அவற்றின்மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
திருச்செங்கோட்டில் 76 திருநங்கைகளும், நாமக்கலில் 72 திருநங்கைகளும் என மொத்தம் 148 திருநங்கைகள் முகாம்களில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நாமக்கல் எம்எல் ராமலிங்கம், நாமக்கல் ஆர்டிஓ கோட்டைக்குமார், திருச்செங்கோடு ஆர்டிஓ இளவரசி, மாவட்ட சமூகநல அலுவலர் கீதா, மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேலு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.