கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ 7 பேர் கொண்ட குழு அமைப்பு
நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குழந்தைகளைப் பாதுகாக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு உதவிட, மாவட்ட கலெக்டரை தலைவராகக் கொண்டு, மாவட்ட அளவில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மருத்துவத்துறை இணை இயக்குநர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி, மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட கலெக்டரால் பரிந்துரைக்கப்பட்ட குழந்தைகள் இல்லம் நடத்துபவர் என 6 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் கணவரை இழந்த பெண்கள் ஆகியோரை கண்காணித்து, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ உதவிகள், மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
எனவே, பொதுமக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோரை இழந்து தனிமையில் வாழும் குழந்தைகள், கணவரை இழந்த பெண்கள், சிகிச்சையில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகள் ஆகியோரை பற்றி தகவல் தெரிந்தால் அக்குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள், உளவியல் ஆலோசனைகள் உள்ளிட்ட பாதுகாப்பும், பராமரிப்பும் வழங்குவதற்காக இக்குழுவினருக்கு தகவல் அளிக்கலாம்.
மேலும், ஊரடங்கைப் பயன்படுத்தி குழுந்தை திருமணம் செய்து வைத்தாலோ, குழந்தைகளை தொழிலாளர்களாக அமர்த்தினாலோ அல்லது குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து தகவல்களை தெரிவிக்க சைல்டுலைன் (1098), 181 மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 04286 233103, 79047 16516 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.