நாமக்கல்லில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே திமுக டிஜிட்டல் வீடியோ வாகன பிரசாரம் துவக்கம்..!
நாமக்கல்லில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே திமுக டிஜிட்டல் வீடியோ வாகன பிரசாரத்தை தீவிரமாக துவங்கியுள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல்:
பார்லி. தேர்தலுக்கு முன்னரே நாமக்கல் பகுதியில், திமுகவினர் டிஜிட்டல் வீடியோ வாகனம் மூலம் பிரசாரத்தை துவக்கியுள்ளனர்.
இந்தியாவில் வருகிற மே மாதம் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகலாம் என தெரிகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய பிரதான கட்சிகள் இன்னும் கூட்டணிகளை முடிவு செய்து, தொகுதிகளை அறிவிக்கவில்லை.
தேர்தல் கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலுக்கு வரவில்லை என்பதால், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் நாமக்கல் பகுதியில் ஃபிளக்ஸ்கள், சென்டர் மீடியன்கள் மற்றும் நோட்டீஸ்கள் மூலம் மறைமுகமான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாமக்கல் நகரில் திமுகவினர் எல்இடி டிஜிட்டல் வீடியோ பிரசார வாகனத்தை தயார் செய்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசின் சாதனைகள், தமிழக முதல்வர் ஏற்கனவே பொதுக்கூட்டங்களில் பேசிய பேச்சுக்கள் போன்றவை இந்த டிஜிட்டல் வாகனத்தின் மூலம் வீடியோவில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், அதன் செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி அறிவுறுத்தலின்படி, நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட 4வது வார்டு சின்னமுதலைப்பட்டி அம்மச்சி அம்மன் கோயில் அருகில், டிஜிட்டல் வாகனம் மூலம் தேர்தல் பிரசாரம் துவக்க விழா நடைபெற்றது. திமுகவின் சாதனைகளை மக்களுக்கு தெரியப்படுத்த விதமாக உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார வாகனத்தை நகராட்சி துணைத்தலைவர் பூபதி துவக்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, நாமக்கல் மஜீத் தெரு, கொசவம்பட்டி, பஸ்நிலையம், திருச்சி ரோடு, கொண்டிசெட்டிப்பட்டி, சிட்கோ காலனி, பார்க் ரோடு, காவேட்டிப்பட்டி, மதுரைவீரன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நாமக்கல் தெற்கு நகர திமுக செயலாளர் ராணா ஆனந்த், மேற்கு நகர திமுக செயலாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் டிஜிட்டல் வாகன பிரசாரம் நடைபெற்றது. ஏராளமான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.