ரசிகர் மன்ற செயலாளர் மரணம்: நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா
நாமக்கல் ரசிகர் மன்ற செயலாளர் விபத்தில் உயிரிழப்பு நடிகர் சூர்யா நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி
HIGHLIGHTS
நாமக்கல்லில் சாலை விபத்தில் இறந்த ரசிகர் மன்ற செயலாளர் வீட்டிற்கு நடிகர் சூர்யா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். சினிமா நடிகர் சூர்யா ரசிகர் மன்ற, நாமக்கல் மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தவர் ஜெகதீசன், இவர் நாமக்கல் மேட்டுத் தெருவில் வசித்துவந்தார். இவர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த நடிகர் சூர்யா, சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு நாமக்கல் வந்தார். அவர் மேட்டுத்தெருவில் உள்ள ஜெகதீசனின் வீட்டுக்கு சென்றார். அப்போது, அவரைக் காண ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் அங்கு வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். பின்னர், ஜெகதீசன் வீட்டிற்கு சென்ற நடிகர் சூர்யா, அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கண்ணீர் விட்டு அழுதார். தொடர்ந்து ஜெகதீசனின் மனைவி ராதிகாவிற்கு ஆறுதல் கூறிய அவர், குழந்தைகளுக்கான படிப்பு செலவை ஏற்பதாகவும், குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.