கொல்லிமலையில் சுற்றுலா விழா ஏற்பாடுகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு
கொல்லிமலையில் நடைபெற சுற்றுலா விழா ஏற்பாடுகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆகஸ்டு.2 மற்றும் 3 ஆகிய இரு நாட்கள், தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா மற்றும் சுற்றுலா விழா நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
கொல்லிமலையில் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரிவிழா மற்றும் சுற்றுலா விழா ஆகஸ்டு.2,3 தேதிகளில் சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவில் தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி, மலர்க்கண்காட்சி, வில்வித்தைப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா நடைபெறும் நாட்களில், கொல்லிமலை செல்லும் பகுதியில் காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, வேலிக்காடு வழி ஆகிய இடங்களில் வனத்துறை மற்றும் போலீஸ் துறையினரால் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுவந்தால் பறிமுதல் செய்யப்படும். எனவே சுற்றுலா பயணிகள் எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவர வேண்டாம். சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை சேகரிக்க ஆங்காங்கே தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மட்டுமே பயன்படுத்திய குடிநீர் பாட்டில்களை போடவேண்டும்.
கடைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் பறிமுதல் செய்யப்படுவதோடு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். எனவே கடைக்காரர்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. கொல்லிமலையில் கடத்த ஒரு மாத காலமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஆகாய கங்கை, மாசிலா அருவி, நம் மருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அருவிகளுக்கு செல்லவோ, குளிக்கவோ சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி கிடையாது. டூ வீலர்களில் கொல்லிமலைக்கு வருபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என்றார்.