மின் கட்டணம் உயர்வை வாபஸ் பெறக்கோரி நாமக்கல்லில் அதிமுக ஆர்ப்பட்டம்
தமிழகத்தில் மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி நாமக்கல்லில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழகத்தில் மின் கட்டணம், சொத்து வரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ தலைமை வகித்து பேசியதாவது:
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த 14 மாதங்களில், அனைத்து வகையான வரிகளையும் உயர்த்தி, ஏழைமக்களை வாட்டி வதைத்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும், மின் வெட்டு இல்லாத, மின் கட்டணம் உயர்வு இல்லாத மாநிலமாக தமிழகம் விளயங்கியது. மேலும், அனைத்து குடும்பங்களுக்கும், 100 யூனிட் இலவச மிவ்சாரம் வழங்கப்பட்டது. மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், 8 ஆண்டுகள் மின் தடை இல்லாமல், மின் கட்டணத்தையும் உயர்த்தாமல் அதிமுக ஆட்சி செயல்பட்டது. ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்த ஒரு வாரகாலத்துக்குள் மின் வெட்டு வந்தது. தற்போது, அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கின்ற வகையில், மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கின்றனர். அதற்கு காரணம், மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளதாக தெரிவிக்கின்றனர். இவர்கள் மின் கட்டணத்தை உயர்த்துவதற்காக, மத்திய அரசின் மீது பழியை போட்டுவிட்டு, நாங்கள் மின் கட்டணத்தை உயர்த்துகிறோம் என்று சொல்கிறார்கள். உங்களுக்கு நிர்வாகத்திறமை இல்லை. நீங்கள் ஓட்டுப்போட்ட மக்களை மறந்துவிட்டீர்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடைபெற்ற கலவரமே சாட்சி. நாமக்கல் மாவட்டத்தில் 20 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவி தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தான் தி.மு.க., அரசின் சாதனை. ஓ.பன்னீர்செல்வத்துடன் ரவுடிகளை அனுப்பி அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை உதைத்தும், உள்ளே புகுந்து கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களையும் உடைத்துள்ளனர். கோவிலாக இருந்து இடத்தை சேதப்படுத்தி உள்ளனர். இதற்கெல்லாம், லோக்சபா தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர். அரசு ஊழியர் முதல், பாமர மக்கள் வரை, எப்போது தேர்தல் வரும் எனக்காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்றைய திமுக ஆட்சியில், அமைச்சர்களைத் தவிர வேறு யாரும் சந்தோசமாக இல்லை என்று அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் சரோஜா, ப.வேலூர் எம்.எல்.ஏ. சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், பொன் சரஸ்வதி, கலாவதி, மாவட்ட பொருளாளர் காளியப்பன், பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், முன்னாள் நகராட்சி
துணைத்தலைவர் சேகர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சாரதா உள்ளிட்ட திரளான அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.