ஜவுளிக்கடை உரிமையாளர் கொரோனாவால் உயிரிழப்பு
நாகப்பட்டினம் அருகே பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் கொரோனாவால் உயிரிழந்தார். இதனால் கடையில் பணிபுரிந்த பெண் ஊழியர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் குறித்த கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடிக்கத் தவறியதால், தமிழகத்தில் மீண்டும் கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை சேர்ந்த பிரபல ஜவுளி கடை உரிமையாளரான பாபு என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே அந்த ஜவுளிக்கடையில் பணிபுரிந்த 30க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தொற்று பரவாமல் இருப்பதற்காக ஜவுளி கடையை மூடி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அவரது உடலை அடக்கம் செய்வதற்கு சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.