நெஞ்சுவலியால் டிரைவர் இறப்பு - தானாக இயங்கிய லாரியால் பரபரப்பு
குளித்தலை அருகே, ஓடிக்கொண்டிருந்த லாரியில் நெஞ்சுவலியால் டிரைவர் இறந்தார்; தானாக இயங்கிய லாரியால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
சேலம் மாவட்டம் சந்தைபேட்டை அருகே காடியாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் நல்லதம்பி (57). இவர் லாரி டிரைவர். சேலம், ஓமலூரில் இருந்து குளித்தலை அருகே உள்ள கவுண்டம்பட்டிக்கு, இன்று லாரியில் செங்கல்களை ஏற்றி வந்து உள்ளார். பின்னர் அங்கு உள்ள தொழிலாளர்கள் மூலம் லாரியில் இருந்த செங்கல்களை இறக்கிய நல்லதம்பி, மீண்டும் சேலத்திற்கு லாரியை எடுத்துக்கொண்டு புறப்பட்டு உள்ளார்.
குளித்தலை - மணப்பாறை மெயின் ரோட்டில், கழுகூர் அடுத்த கே.துறையூர் சாலையில் லாரி வந்து கொண்டு இருந்தபோது நல்லதம்பிக்கு மயக்கம் ஏற்பட்டு, லாரியின் ஸ்டியரிங்கில் சாய்ந்து இறந்துள்ளார். டிரைவர் இயக்காத நிலையில், தானாகவே சுமார் 100 மீட்டர் தூரம் வந்த பிறகு, அந்த லாரி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டு லாரி நல்லதம்பி இறந்த நிலையில் கிடந்தது தெரிய வந்தது. அவரது உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த, தோகைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
குளித்தலை - மணப்பாறை மெயின் ரோட்டில், லாரியில் இறந்த நிலையில் சுமார் 100 மீட்டர் தூரம் வந்தபோது ரோட்டில் வாகனங்கள் வராததால் அதிர்ஷ்ட வசமாக பெரும் விபத்துகள் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.