அரியலூர் மாவட்டத்தில் பான்மசாலா, நெகிழி பொருட்கள் விற்பனைக்கு தடை
அரியலூர் மாவட்டத்தில் பான்மசாலா, குட்கா, நெகிழி பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பான்மசாலா, குட்கா மற்றும் நிக்கோட்டீன் உள்ள புகையிலை பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட நெகிழி பொருட்கள் ஆகியவற்றின் விற்பனை தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு சுவாச கோளாறுகள் மற்றும் புற்றுநோய் ஆகியவை ஏற்பட்டு உயிர் இழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள உணவு வணிகர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் புகையிலை பொருட்கள், பான்மசாலா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை நிறுத்திட வேண்டும்.
பான்மசாலா மற்றும் குட்கா விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன்படி ரூ.5000/- முதல் ரூ.10000/- வரை அபராதமும், மறுமுறை விற்பனை கண்டறியப்பட்டால் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்படும். பொதுமக்களும் தங்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு புகையிலை பயன்பாட்டினை கைவிடுதல் வேண்டும்.
மேலும், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், தடைசெய்யப்பட்ட நெகிழி பொருட்கள் மற்றும் உணவு பொருட்களின் தரம் குறித்த புகார்களை உணவு பாதுகாப்பு துறை வாட்ஸ்ஆப் புகார் எண்ணான 9444042322-க்கு தெரியப்படுத்தலாம்.
மேலும் உணவகங்கள், மளிகை கடைகள் மற்றும் இதர உணவு வணிக நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு துறை வாட்ஸ்ஆப் புகார் எண்ணான 9444042322-னை பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் பார்வையில் படும்படியான இடத்தில் காட்சி படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.