திருவண்ணாமலை அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
பறையம்பட்டில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
HIGHLIGHTS
பறையம்பட்டில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபா கூட்டங்களை நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் நேற்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது.
திருவண்ணாமலை அடுத்த பறையம்பட்டு ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபா கூட்டத்தில், கலெக்டர் முருகேஷ் கலந்துகொண்டார்.
மாநில தடகள துணை தலைவர் கம்பன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரண்யா தேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமாபதி ஆகிேயார் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் முருகேஷ் கூறுகையில்,
கிராமத்தின் வளர்ச்சிக்கு திட்டமிடுவதற்காக கிராம சபா கூட்டம் நடத்தப்படுகிறது. கிராமத்துக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை, தெருவிளக்கு, மயானபாதை உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றுவது குறித்து கிராம மக்களின் கருத்துக்களை கேட்டு கிராம சபா கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
மேலும், ஒருங்கிணைந்த அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், கடந்த 2021-2022ம் ஆண்டில் 169 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. நடப்பு ஆண்டில் 175 கிராமங்களும் வரும் நிதி ஆண்டில் 175 கிராமங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன
கிராம வளர்ச்சித் திட்டத்துக்கான கணக்கெடுப்பு பணி தற்போது நடந்து வருகிறது. அதன் அடிப்படையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு திட்டங்கள் நிறைவேற்றப்படும். அரசின் வீடு வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகளையும் இப்பட்டியலில் இருந்துதான் தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே, தகுதியுள்ள அனைவரும் இந்த கணக்கெடுப்பில் விடுபடாத வகையில் இப்பணி நடைபெற வேண்டும். அதற்கு, அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்.
அனைத்து கிராமங்களுக்கும் இணையதள சேவையை ஏற்படுத்த அரசு 2 ஆயிரம் கோடி நிதியில் திட்டம் தீட்டியிருக்கிறது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 கிராமங்களிலும் அதற்கான கேபிள்கள் பதிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. முதற்கட்டமாக 12 ஒன்றியங்களில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இப்பணி முடிவடைந்தால், அதிக திறனில் இணைய சேவை கிடைக்கும். ஊராட்சி மன்ற தலைவருடன் முதல்வரே நேரடியாக தொடர்புகொண்டு பேசும் வாய்ப்பு உருவாகும்.
முதல்-அமைச்சரின் திட்டமானக காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டம் மேலும் விரிவு படுத்தப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு செல்ல பெற்றோர்கள் வழி வகுக்க வேண்டும். தமிழ் வழி கல்வியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அரசு வழங்கப்பட்டு வருகிறது. எனவே பெற்றோர்கள் பெண் குழந்தைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
கலெக்டரிடம் வீட்டுமனை பட்டா, குடிநீர் வசதி, முதியோர் உதவித்தொகை கேட்டு பொதுமக்கள் மனுக்கள் வழங்கினர்.
அதைத்தொடர்ந்து, பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில், வேளாண் கருவிகள், சுய உதவிக்குழு கடன், ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன், வேளாண்மை பொறியாளர்கள் கால்நடை உதவி இயக்குனர் ஜெயக்குமார், கால்நடை உதவி மருத்துவர் தீனதயாளன், திருவண்ணாமலை ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ேடார் கலந்து கொண்டனர்.