வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவண்ணாமலையில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் 100 சதவீதம் ம்ம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தல் முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனைத்து துறைகளுக்கும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அறிவுறுத்தினார்.
வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளும், வேளாண்மை குழுக்களும், ஊரக வளர்ச்சி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் வீடு வீடாக சென்று மக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், மகளிர் திட்டத்தின் சார்பில் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களும், பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ மாணவியர்களுக்கும் பெற்றோர்களுக்கும், மேலும் மாற்று திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களை கொண்டு மக்களிடையே குறைந்தது பத்து நபர்களுக்காவது வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் செல்லும் பேருந்துகளில் பாராளுமன்ற பொது தேர்தல் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து அரசு தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை ஒட்டியும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் இடத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்காளர்களிடம் விழிப்புணர்வை கலெக்டர் ஏற்படுத்தினார்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று பல்வேறு துறைகளின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ரிஷப், ஆரணி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி , தமிழ்நாடு போக்குவரத்து கழக பொது மேலாளர் செந்தில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிவகுமார் ,வாகன முதுநிலை ஆய்வாளர் பெரியசாமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நேர்முக உதவியாளர் பொன் சேகர், தாசில்தார் தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, கிராம நிர்வாக அலுவலர் காமேஷ் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.