கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை மறியல்

கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை மறியல்
X

போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திருவேற்காடு கூவம் ஆற்றின் அருகே வசித்து வரும் வீடுகளை அகற்ற நோட்டீஸ் ஒட்ட வந்த அதிகாரியுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

குறிப்பாக கூவம் நதிக்கரையை ஒட்டி மேடான பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்புகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும் நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த குடியிருப்புகள் இருப்பதாக கூறி அகற்றுவதற்காக வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வருவாய்த் துறையினர் இந்தப் பகுதியில் உள்ள வீடுகளை கணக்கெடுத்து அளவீடு செய்யும் பணிகளில் சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கெடுத்த வீடுகளில் நோட்டீஸ் ஒட்டுவதற்கு வந்தனர்‌. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் திருவேற்காடு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர் .இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அகற்றப்பட உள்ள வீடுகளில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதட்டமான சூழ்நிலையும் நிலவியது.

Tags

Next Story