திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்,
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பௌர்ணமி உள்ளிட்ட விழா நாட்களில் மட்டுமே பக்தர்கள் வருகை அதிகமாக இருந்த நிலை மாறி, அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, தொடர் அரசு அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். அதன்படி, சனி, ஞாயிறு அரசு விடுமுறையான கடந்த இரண்டு நாட்களாக அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்திருந்தது. அதன்படி, நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
அதேபோல், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட கட்டண தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகரித்திருந்தது. மேலும், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்துச் செய்யப்பட்டது. மேலும், தரிசனத்திற்கு பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க, ஒற்றை வரிசை விரைவு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாடவீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால், பெரிய தெரு, பேகோபுர தெரு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் அனுமதிக்கப்படுகின்றன. எனவே தேரடி வீதி மற்றும் கடலைக்கடை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் கோயிலுக்கு வந்த வாகனங்களால் நெரிசல் காணப்பட்டது. வாகனங்களை நிறுத்த இட வசதியின்றி பக்தர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டது.
வாகனங்கள் நிறுத்தும் இடம் தேவை என்பது குறித்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் அடுக்குமாடி கார் நிறுத்தம் வசதி செய்யப்பட்டுள்ளது அதேபோல் திருவண்ணாமலையிலும் அதேபோல் அடுக்குமாடி கார் நிறுத்தும் இடம் செய்து கொடுக்கப்பட்டால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மணி அம்மன் கோபுரம் அருகில் கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றப்பட்டது. அந்த இடத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல் கோவில் ராஜகோபுரம் அருகில் காலி இடம் உள்ளது. மேலும் சன்னதி தெருவில் பயன்பாட்டில் இல்லாத பழைய நகராட்சி அலுவலக கட்டிடம் உள்ளது. இது போன்று பயன்பாட்டில் இல்லாத இடங்களில் அடுக்குமாடி கார் நிறுத்தும் இடம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்சமயம் கோவிலுக்கு வரும் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் அலையும் பக்தர்களின் அவலநிலையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கோவிலுக்கு அருகாமையிலோ, கிரிவலப்பாதையிலோ கார் நிறுத்த இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.