ஆவடி மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு - பொதுமக்கள் ஏமாற்றம்
ஆவடி மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக ஆர்வத்துடன் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம்போல தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் அதிகளவில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குவிந்து வருகிறார்கள். ஏற்கனவே ஆவடி மாநகராட்சியில் மொத்தம் 32,250 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் அமைச்சர் சா.மு. நாசர் தலைமையிலான அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆவடி மாநகராட்சியில் தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ளதைடுத்து நாளை முதல் நாளொன்றுக்கு 6ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
அந்தவகையில் இன்று, ஆவடி பருத்திப்பட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போடுவதற்காக காத்திருந்த வேலையில் 50 பேருக்கு மட்டும்தான் தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை செவிலியர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி ஆவடி மாநகராட்சியின் பொறுப்பு சுகாதார அலுவலர் ஜாபர் அவர்களிடம் கேட்டபோது: இன்று மாலை தான் ஆவடிக்கு தடுப்பூசி வந்து சேரும். நாளை முதல் தவறாமல் நாளொன்றுக்கு 6ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று இருந்த குறைவான அளவு இருப்பை வைத்துதான் இன்று ஊசி போட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்..