காணாமல் போன 61 செல்போன்கள் மீட்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன 61 செல்போன்கள் மீட்க நடவடிக்கை எடுத்த சைபர் பிரிவு போலீசாருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் சுதாகரன், பெர்லின் பிரகாஷ், உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார்.அதன்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை கண்டுபிடித்தனர். அதன்படி ரூ 6 லட்சம் மதிப்புள்ள 61 செல்போன்களை அதன் ஐ.எம்.இ.ஐ எண்ணை வைத்து கண்டு பிடித்து, அவைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை, அதன் உரிமையாளர்களிடம் இன்று (12 ம் தேதி) மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் வைத்து மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஒப்படைத்தார். பின்னர் எஸ்பி., பேசுகையில் செல்போன்களை பலர் பல்வேறு வழிகளில் தொலைத்திருக்கலாம். வங்கி விபரங்கள் போன்ற உங்களுடைய தனிப்பட்ட விபரங்களையும், புகைப்படங்களையும் செல்போனில் வைக்காதீர்கள். கவனமில்லாமல் உங்கள் செல்போன் தொலைத்து விட்டால், அது ஒரு வேளை சமூக விரோதிகள் கையில் கிடைத்து விட்டால் அதை பல்வேறு சட்ட விரோதமான காரியங்களுக்கு பயன்படுத்தக்கூடும் எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.