வருவாய்த்துறையினர் 4வது நாளாக வேலைநிறுத்தம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இன்றும் 4வது நாளாக தொடர்கிறது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் அலுவலக உதவியாளர்கள் முதல் தாசில்தார் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனிஊதியம் வழங்கப்பட வேண்டும். மாவட்டங்களில் அதிக அளவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதில் இன்று 4வது நாளாக போராட்டம் தொடர்கிறது. 400-க்கும் அதிகமானோர் இதில் பங்கேற்று உள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உதவி ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடியது. வருவாய்துறையின் அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன.