அண்டை மாநிலத்தை போல் டீசல் விலையை குறைக்க லாரி சம்மேளனம் கோரிக்கை
தினசரி டீசல் விலையை உயர்த்தி வந்ததால், கட்டுபடியான வாடகை கிடைக்காமல் சுமார் 30 சதவீதத்திற்கு மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
HIGHLIGHTS
அண்டை மாநிலங்களைப்போல் தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில செயலாளர் வாங்கிலி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் லாரிகள், பஸ்கள், மினி லாரிகள் உள்ளிட்ட சுமார் 4.5 லட்சம் கனகர வாகனங்கள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கம்பெனிகள் தினசரி டீசல் விலையை உயர்த்தி வந்ததால், கட்டுபடியான வாடகை கிடைக்காமல் சுமார் 30 சதவீதத்திற்கு மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த 3ம் தேதி, மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் டீசல் விலை லிட்டருக்கு ரூ.11.17 குறைக்கப்பட்டது. இதைத் தொடர்நது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.7 முதல் 12 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இனி வரும் காலங்களில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தினசரி விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே விலை நிர்ணயம் செய்யவேண்டும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிபெற்றால் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.4 குறைக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் இதுவரை குறைக்கவில்லை. தற்போது அண்டை மாநிலங்கள் டீசலுக்கான வாட் வாரியை குறைத்தபோதும், தமிழக அரசு வாட் வரியை குறைக்க முன்வரவில்லை.
இதனால் தமிழகத்தில் உள்ள லாரி உள்ளிட்ட கனரக வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அண்டை மாநிலங்களுக்கு இணையாக தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்காவிட்டால், நமது மாநில வாகனங்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று டீசல் பிடிக்கும் சூழல் உருவாகும். இதனால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுத்தை டீசல் விலையை அண்டை மாநிலங்களுக்கு இணையாக குறைந்தது லிட்டருக்கு ரூ.7 வாட் வரி குறைக்க வேண்டும்.
லாரிகளுக்கான எப்.சி சான்றிதழ் பெறும்போது அராய், ஐகாட் போன் அமைப்புகளின் சான்று பெற்ற எந்த ஒரு கம்பெனியின் 3டி ஸ்டிக்கர்களை ஒட்டலம் என்று கடந்த செப்.6ம் தேதி மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் தமிழக போக்குவரத்துத்துறை இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை. எனவே இந்த பிரச்சினையில் தமிழக அரசு மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அவர் கூறினார். நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க துணைத்தலைவர் சுப்புரத்தினம், பொருளார் சீரங்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.