கொல்லிமலையில் கூட்டுறவு சங்கம் சார்பில் பயணியர் விடுதி திறப்பு விழா
கொல்லிமலையில் கூட்டுறவு சங்கம் சார்பில் பயணியர் விடுதி திறப்பு விழாவில் மாநில பதிவாளர் கலந்துகொண்டார்.
HIGHLIGHTS
நாமக்கல்:
கொல்லிமலையில் கூட்டுறவு சங்கம் மூலம் கட்டப்பட்டுள்ள பயணிகள் தங்கும் விடுதியை, மாநில பதிவாளர் திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள அரப்பளீஸ்வரர் கோயில், கொல்லிப்பாவை, எட்டுக்கை அம்மன் கோயில், பெரியசாமி கோயில் உள்ளிட்ட கோயில்களும், ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி, நம்ம அருவி, மாசிலா அருவி போன்ற அருவிகளும், பொட்டானிக்கல் கார்டன், வியூ பாயிண்ட், போட் ஹவுஸ் போன்றவைகளும் சிறப்பு பெற்ற இடங்களாக விளங்குகின்றன. கொல்லிமலையில் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக அரசு சார்பில் இளைஞர் விடுதியும், தனியார் ஹோட்டல்களும் உள்ளன.
கொல்லிமலயில் கூட்டுறவுத்துறை மூலம் லேம்ப் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் மலைவாழ் மக்களுக்கு, அரசின் மானிய உதவியுடன் பல்வேறு வகையான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சங்கத்தின் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் மிளகு, காபி போன்றவை கொள்முதல் செய்யப்பட்டு மாநில அளவிலான கூட்டுறவு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன்மூலம் மலைவாழ் விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. இந்த நிலையில், கொல்லிமலைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு உதவிடும் வகையில், இச்சங்கத்தின் மூலம் ரூ. 38 லட்சம் மதிப்பீட்டில், ஓரிலேண்ட் காட்டேஜ் என்ற நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில், கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டு தங்கும் விடுதியை திறந்து வைத்தார். மேலும், நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ. 1.70 கோடி மதிப்பில் கடன் உதவிகளை அவர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் செல்வக்குமரன், சரக துணைப்பதிவாளர் கர்ணன் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், மலைவாழ் மக்கள் விழாவில் கலந்துகொண்டனர்.