ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை முயற்சி: பெற்றோர் சிஇஓவிடம் புகார்
அரசு பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை முயற்சித்தது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் சிஇஓவிடம் புகாரளித்தனர்.
HIGHLIGHTS
நாமக்கல் அரசு மகளிர் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் சிஇஓவிடம் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர்கள் சிலர், சிஇஓ மகேஸ்வரியிடம் அளித்துள்ள மனுவில், எங்கள் மகள்கள், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். அதில், 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு, அப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவரால், பாலியல் தொல்லை நடந்துள்ளது. அந்த மாணவி, தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசில், கடந்த 4ம் தேதியன்று, பிறந்த தேதி மற்றும் இறப்பு தேதி (4.12.2021) எனக் குறிப்பிட்டு, நான் இறக்கப்போகிறேன் என்பதை மறைமுகமாக பதிவு செய்துள்ளார்.
அதைப் பார்த்த சக மாணவியர் அதிர்ச்சி அடைந்து, மொபைல் போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவரிடமிருந்து பதில் இல்லாததால், சக மாணவியரின் பெற்றோர் சம்பந்தப்பட்ட மாணவியின் வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது, அந்த மாணவி தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக அவரை தடுத்து, சமாதானம் செய்ததுடன், காரணம் குறித்து கேட்டபோது, பள்ளி ஆசிரியர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்வது குறித்து தெரிவித்துள்ளார். மேலும், சக மாணவியர் சிலரும் தங்களுக்கும் இதுபோல் நடந்துள்ளதாக தெரிவித்தனர்.
சம்மந்தப்பட்ட ஆசிரியர், மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொள்வதாக தெரிவித்துள்ளனர். ஆசிரியர், மாணவியரிடம் தவறாக நடந்து கொள்வது குறித்து யாரிடமாவது கூறினால், மார்க் குறைப்பேன் என மிரட்டுகிறார். இதுபோன்ற சூழலில், மனம் உடைந்த மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அந்த மாணவியின் நிலைக்கு காரணமான ஆசிரியர் மீது துறை ரீதியாக, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.